திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.36 திருவையாறு
பண் - தக்கராகம்
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.
1
மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.
2
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே.
3
சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே.
4
உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.
5
தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.
6
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே.
7
வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே.
8
(*)சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

(*) சங்கத்தயனும் என்றும் பாடம்.
9
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.
10
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.120 திருவையாறு - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1
கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
2
வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
3
வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
4
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
5
முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
6
வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
7
விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
8
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
9
மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
10
நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.130 திருவையாறு
பண் - மேகராகக்குறிஞ்சி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
    அறிவழிந்திட் டைம்மேலேந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
    றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
    முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
    முகில்பார்க்குந் திருவையாறே.
1
விடலேறு படநாகம் அரைக்கசைத்து
    வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
    பலியென்று மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
    னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
    கீன்றலைக்குந் திருவையாறே.
2
கங்காளர் கயிலாய மலையாளர்
    கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
    விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
    இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
    இரைதேருந் திருவையாறே.
3
ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
    பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
    தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
    மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல
    மொட்டலருந் திருவையாறே.
4
நீரோடு கூவிளமும் நிலாமதியும்
    வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
    தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
    பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
    நடம்பயிலுந் திருவையாறே.
5
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
    நெறிகாட்டும விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
    புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
    பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
    நடமாடுந் திருவையாறே.
6
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
    புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
    மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
    மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
    கண்வளருந் திருவையாறே.
7
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
    அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
    கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
    இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
    வயல்படியுந் திருவையாறே.
8
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
    மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
    வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
    குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
    நடமாடுந் திருவையாறே.
9
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
    சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
    யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ணர் எம்மீசர்
    இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
    வந்தலைக்குந் திருவையாறே.
10
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
    பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
    சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
    ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
    றெய்துவார் தாழாதன்றே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com